Thursday, May 28, 2009
மோட்சம்
நிலவு உருகும்
பொழுதொன்றில்
உன்னிடம் வருவேன்
அடைக்கலமாய்..!
அந்த தனியறையில்
மொழித்தேவையில்லா
உரையாடலில்
ஈரம்துளிர்க்கும்
விழி வழி..
உயிர்பெயரும்
நம் உணர்வுகள்..!
காலக்கிரமத்தில்
ஏமாற்றங்களில்
தேய்ந்த
நம் கைரேகைகள்
கலந்துரையாடும்..!
நீளும் நிசப்தத்தில்
மனக்குகையின்
ஆழ்ந்த இருட்டுக்குள்ளிருந்து
திடீரென முளைக்கும்
வெளிச்ச கைகள்
நம்மை கட்டியணைக்கும்..!
புயலுக்கு பின் அமைதியாய்
புறப்படும்
பெருமூச்சொன்றில்
தூக்கியெறியப்படலாம்...
நம் தீரா வேட்கைகள்..!
முகம் மூடிய
உன் சேலை தலைப்பின் வழி
தெரியும்
உன் மலர்ந்த முகத்தின்
சிரிப்பில்..
எனக்கு கிடைக்கலாம்
வாழ்வின் மோட்சம்..!
Monday, May 25, 2009
வாழ்வின் பசி
அந்த
நாற்றங்காலில்
நடப்படுவோமென
எதிர்பார்க்கவில்லை நாம்.
நதிகளின் கசிவும்
மேகத்தின் பொழிவும்
வளர்த்தெடுத்தென நம்மை.
ஈரமண் துளாவி
வேர்நிலைத்த விளைவில்
வான் நோக்கி வளர்ந்தது
பொன் மணிகள்.
நாள் பார்த்துவந்து
அரிவாள் வினை செய்ய
நேசப்பச்சயம்
வெளுக்க வெளுக்க
பாறையில் கொண்டுபோய்
போரடித்தார்கள்.
வாழ்வின் தூற்றலில்
காற்றின் திசையில்
பயணித்த
உமியாக நான்..,
மூட்டைக்குள்
அடைப்பட்ட..
நெல்லாக நீ..!
இந்த கவிதை இளமைவிகடனில் வெளியானது
நினைவின் குரல்
அழைக்கிறாய் நீ..
வேண்டுதலோ..
விருப்பமோ..
கட்டளையோ..
ஏதுமற்று
அது என் கதவை தட்டுகிறது.
ஜன்னலில் எட்டி பார்க்கிறது..
குறுகுறுப்பாய்
வீட்டை சுற்றி வந்து
வாசலில் படுக்கிறது
ஒரு நாய் குட்டியாய்..
சேமித்து வைத்த
பழஞ்சோகங்களை
அலுமினிய தட்டில் வைக்கிறேன்.
இளைப்பினூடே
உண்கிறது
என் புண்களை
உன் நினைவு.
Tuesday, May 12, 2009
எனக்கு பிடித்த என் ஊர்
Thursday, April 23, 2009
ஆப்பிள் தின்ற நாள் முதல்...
என் உயிருக்கு
அவசியப்படும்
அந்த ஒன்றை...
சிறுபிள்ளை போல்..
எங்கோ உனக்குள்
ஒளித்துவைத்துக்கொண்டு...
வழிமட்டும் காட்டுவேன்..
தேடி கண்டடையென..
நீ களமிறக்குகிறாய் என்னை..,
குறுகிய இடுக்கினில்
மெல்ல நுழைந்து..
அடியும்..முடியும்..
ஒருசேர தேடி..
பயணம் நீள...
என் சாதகத்தை
வேதனையாய் கருதினாயோ.என்னவோ...
ஒளித்தவிடத்திலிருந்து....
நான் தேடி வந்ததை...
அள்ளி..அள்ளி..
நீயே தருகிறாய்..,
நான் உனக்கு தருவதும்..
உன்னிடமிருந்து
நான் பெறுவதுமான
இந்த
விளையாட்டில் மட்டுமதான்..
வெற்றி வாய்க்கிறது...
எதிர்த்துப் போட்டியிடும் இருவருக்கும்.
வெற்றிக்கோப்பை
ஏந்திய களிப்பில்
ஒன்றாய் கலந்து இழைகிறது..
நம்..ஒற்றை சுவாசம்.
Tuesday, April 21, 2009
திரும்ப கிடைத்த என் விலா எலும்பு
Thursday, April 16, 2009
வீடு திரும்புதல் குறித்து
ஒப்புமையற்ற தன்மைக்கு
உவமானம் வேண்டுமா..?
வாழாததில் வாழும்
கனவு அது.
இருப்பதாய் காட்டும்
இல்லாமையின்
இருப்பு அது.
ஓடும் பெரு நதியில்
எங்கோ ஓரிடத்தில்
சட்டென குமிழ்ந்து
பட்டென வெடிக்கும்
நீர் குமிழ் அது.
உடனிருப்பதாய் காட்டி
உபயோகப்படாத
நிழல் அது
சூரிய சூட்டில்
சலவையாகும்
பனித் துளி அது.
காரிருள் வானில்
பளிச்சென தோன்றி
நொடியில் மறையும்
மின்னல் அது.
நிழலாய் தொடரும்
பிறவியை அறுப்போம்
விழலெனப்போகும்
வாழ்வின் கணங்களை
முழுமையில் மூழ்கி
மூச்சடக்கி
பிறவா நிலையின்
முத்தெடுத்து
புறப்பட்ட இடத்தின்
முகவரி தேடி
திரும்பும் வீட்டுக்குள்
பத்திரமாய்
ஒளித்துவ்வைப்போம்.
Monday, April 13, 2009
நீலம்
கெட்டித்த மேலோட்டை
மென்மையாக்கி
மனதிடை புகுந்த
பார்வை மத்தால்
கனவொரு பக்கமும்
நினைவொரு பக்கமும்
நீயே நின்று
காதலை கடைந்ததன்
முடிவில் திரண்ட
அமிழ்தத்தை
அள்ளி அள்ளி பருகிவிட்டு
ஆலகாலத்தை
எனக்கு தந்துவிட்டுப்போகிறாய்..
ஒற்றை கையால்
கண்டத்தை இறுக்கி
மறுகையால்
நானெழுதிய
கவிதையெங்கும்
பாரித்திருக்கிறது நீலம்.
நுரைத்து வழிகிறது
உனக்கான
காதல் சொட்டும்
வாசகங்கள்.
Sunday, April 12, 2009
எரிதழல் கொண்டுவா தோழி
எரி தழல் கொண்டுவா தோழி சிறு தீப்பந்த நுனியினில்
சின்னதாயொரு தனல் பொட்டு வைக்க..!
காட்டு விறகினில்
கண்டெடுத்த கட்டையாய்
கண்டாயோ இதை நீ..,.?
நேற்றையப் பொழுதினில்
நெடும்படை கண்டு
உரிமையின் வேள்வியில்
உயிரை உகுத்த
ஒரு வீரனின்
தீரா நடையினில்
உதிர்ந்த காலின் எலும்பிது..!
பற்றி எரிந்திட
சுற்றிய துணியின்
கதை அறிவாயோ..?
அது..
அத்துமீறல்
பற்றியிழுத்த கொடும்பொழுதொன்றில்
மிச்சமாய் கிடைத்த
என் தங்கையின் சேலை...!
வாழ்வின் காட்சி இழந்த
பல நூறு விழிகளின்
கண்ணீர் வடித்து
தூக்கிப்பிடித்த
இத் தீப்பந்தம் எரிய
எரிதழல் கொண்டுவா தோழி..!
வெடிகளின் பாதையில்
வீரமே வெளிச்சம்.
விருட்சம் ஆவதற்கே
விழுகின்றன விதைகள்...!
ஆலயமணி - ஆராய்ச்சிமணி
"உன் மீதென்ன
இவ்வளவு கறைகள்?"
"வெறும் கறைகளல்ல..
ரத்தக் கறைகள்..இவை..!
கொலை வெறிக் கரங்களின்
பாவம் துடைக்கும்..
கைகுட்டை ஆகிவிட்டேன் நான்..!"
" உன்னை கழுவ
அந்த ஆண்டவன் வரவில்லையா..?"
"சந்தன திருநீற்று
அர்ச்சனையில் மூர்ச்சையுற்று..,
மந்திர உச்சாடனத்தின்..உச்சஸ்தாயில்
செவிப்பறை கிழிந்து..,
உயிர் வெளுக்க..
உடல்களை அடித்து துவைக்கும்..
ஆற்றோரக்கல்லாய்..
ஆனபின்பு..
ஆண்டவனெங்கே வருவது
என்னைக் கழுவ..?
ஆமாம்..
உன் நிழலில்
அந்த தாய் பசு இளைப்பாறுகிறதா..?"
" இல்லை..இல்லை..
என்னை..இழுத்து..இழுத்து..
சோர்ந்துபோய் செத்துக்கிடக்கிறது.."
"முறையிட்ட குரலுக்கு
மன்னன் வரவில்லையா..?"
"த்ன் மகனின்
மகுடாபிஷேகத்தில்..
மார் தட்டிக்கொண்டிருக்கிறான்."
விதைப்பும் - அறுப்பும்
அன்றொரு நாள்..
மல்லிகை கமழ்ந்த
இருட்டறை ஒன்றில்
இருவர்..விளயாட்டாய்
இன்னொரு இருட்டறையில்
பதுக்கி வைத்த..
ஒளிப்புள்ளியின்
சுடர்..,
அசைந்தசைந்து..
சுற்றுச் சுவரை
இடிக்க.,
பின்பொரு நாள்
கருவூர் பொலபொலத்து
எங்கும் கலந்தது ஒளி..!
***********0000*****************
யார்க்கும்
சொந்தமற்று
மெய் மாறி வந்த
புல்லாங்குழலின்
உள்ளுக்கு வெளிக்கும்
நடை நடந்த காற்று.,
நிலைகொண்ட
ஓர் நாள்..கச்சேரி நின்று..
குழந்தையின் கையசைவில்
துவங்கியது மீண்டும்..!
மூங்கில் காடெங்கும்
சுவாசத்தின் சுவடுகள்.
கண்மூடி பார்த்தல்
இயற்கை பெருநிலையில்
ஆன்மாவின்சலவை
பற்றில் தோயும்
ஆசைஅலைவை
உணர்த்தும்
பொருள்வெளி
புழுதியை
புறம்தள்ளி
மறுதலித்தால்
புரியும்..
தேடுபொருளில்
புதைந்த நிஜம்..!
ஆயும் மனச்சுடரை
அணைத்தாயிற்று.,
பொல்லாத் தனம் எனும்
அடிமைக் கட்டுக்குள்
பிணைத்தாயிற்று..
,
திரவியத்தின் திசையில்..
உள்ளதெது..?
அல்லதெது....?
மனகேமராவின்
கோணத்தை மாற்றினால்
துல்லியப்படும்
பார்க்க துடித்ததும்..,
பார்க்க கிடைத்ததும்..,
பார்க்க பணித்ததும்..,
ஆசையின் சிலுவையில்
அறையப்பட்ட..
ஆன்மாவை அறுத்தெடுக்கட்டும்..
உள்முக தேடலின்
உன்னத தியானம்..!
பிறகு தெரியும்
புதுப் பாதையில்..,
தேடலுக்கான போராட்டம் ஒழிந்து..
துவங்கிவிடும்..
அமைதியின்..
ஞான நர்த்தனம்...!
ஆரண்யம்..
பரிமாற்றம்.
தீ குச்சியிலிருந்து
தீவட்டிக்கு..,
அங்கிருந்து..
சிதை நிலைத்து
மெய் உண்டு வாய் துடைத்த
தீயின்..மிச்ச
தணல் பொறுக்கி
ஆற்றங்கரை அடைந்தனர்..
மீண்டும் மெய்யுள்
தீ புகுவதறியாமல்..
அணைத்து கரைக்க..!
உங்கள் கவனத்துக்கு...
வாலும்..வாழ்வும்
அந்திப் பொழுதொன்றில்..
உயிர் கொண்ட
வீட்டுக் குழல் விளக்கினோரம்
ஒளி அண்டி ஒதுங்கிய
சிறு பூச்சியொன்றை..
பதுங்கிக் காத்திருந்து..
பல்லி விழுங்கியதைக்
கண்டு பதைத்த..
அதே நொடி..
அறுந்து விழுந்தது
பல்லியின் வால்,
மீளாப் பூச்சியின்
வாழ்வுக்கு..
ஈடாகக் கூடுமோ?
திரும்ப முளைக்கும் வால்..
கற்றலில் நிற்றல்...
.செய்வதற்கென்று
நிறையவே இருந்தது..சாலையிலொருவன்
மயங்கி சரிகையில்
ஓடிப்போய் தாங்கவும்
மடியில் கிடத்தி
தண்ணீரெனக் கதறி..
ஓடும் வாகனம் மறித்து
மருத்துவமனை விரையவும்..,
இப்படி
எதையுமே
செய்ய இயலாமல் போவதற்கு
சட்டென கிளம்பிய
நானிருந்த பேருந்தோ..,
பக்கத்திருக்கையில்
என்னை இறுக்கி வைத்திருந்த
தொந்தி ஆசாமியோ.,
யாருமில்லை காரணம்..என
உறைக்கும்
போதி தருணத்தில்
ஞானம் ஏற.,
தொண்டைக்குழியில்
தயங்கியிறங்கும்..
டப்பாவிலடைத்த
மதிய உணவு..!
மீண்டுமொருமுறை
இப்படி நேர்கையிலும்..
இப்படியேதான்
நடந்துகொள்ளக்கூடும்
என்
பாடம் செய்யப்பட்ட
பாழ்மனம்.
வீட்டின் சாவி
ஏதோ ஒரு புள்ளியில்தான்
அது
துவங்குகிறது..,
வளைந்து நெளிந்து
சுருங்கி நிமிர்ந்து
இணைப்பு புள்ளித் தேடி
தொடர்கோடாய்
கிளைத்து வளர்ந்து..,
பூரணப்பட்ட பின்..
தனக்கென வாழாமல்
பிறர்க்கென வாழ்வதில்
அர்த்தப்படுகிறது..
கோலம்..,
மாறாய்..
தனக்கென மட்டுமே
வாழ்ந்து..
அலங்கோலமாகிறது
வாழ்கை.
நிழலுரையாடல்
பேசிக்கொண்டிருந்தேன்
அவற்றின் நிஜம் பற்றி..,
நிஜமறிந்த நீட்சியில்
நிழல்கள் கரைந்து
மெதுவாய் உருவாகின
நிஜங்கள்..,
வார்த்தைகள் வளர..வளர..
என் நிஜம் கரைந்து..
நிழலாகிப்போனேன்.
Saturday, April 11, 2009
தொங்கும் நேசம்
உத்தரவு
தலைக்கோதுவதை நிறுத்து..
கண்களின்
பனிக்குடம் உடைய
ரத்தக் கவுச்சியடிக்க
தொப்புள்கொடி சுற்றிப் பிறக்கும்
கனவுப் பிரசவங்களுக்கு
சீம்பாலாய்
இன்னும் எத்தனை நாளைக்குத்
தருவது..
பிரிவின் கண்ணீரை?
போதும்.. போதுமென
கிறு கிறுக்கிறேன் நான்..,
என் உடல் பொருள்.. ஆவியின்
அத்தனை வாயிலும்..
வழிந்து கொட்டுகிறது..
வரிந்து.. வரிந்து..
நீ ஊட்டிய பிரிவு!
இந்த கவிதை யூத்ஃபுல்விகடன் டாட்காமில் வெளியானது
மறத்தலும்..மறத்தல் சார்ந்தும்...
நீ காற்று...
என்னிலிருந்த அவர்களும்..நானும்...
உயிரின் கவிதை
ஞாபகப் பெருக்கு..
கட்டுப்படாத காற்று.
அழகின் நிறத்தில் ஆபத்து...
மன லாயம்
யாவற்றுக்கும் அப்பால்..
நெய்தென்னை
முச்சந்தியில்
'தொங்கவிட
வசீகரித்து
வாங்கி உடுத்தியவளின்..
இடது மார்பில் கிழிந்து
அவள்
தூக்கி எரிந்த பெட்டிக்குள்
அவளைக்
கட்ட முடியாத
புடவையாக நான்!
Sunday, April 5, 2009
அழகின் அரக்கி
பிரிந்தவர்களுக்கான நிலா
நாம் பேச நினைப்பதெல்லாம்...
பிரிவில் இணைந்தவர்கள்...
இரவுக்கு தாலாட்டு
Blog Archive
-
▼
2009
(37)
-
►
April
(33)
- ஆப்பிள் தின்ற நாள் முதல்...
- திரும்ப கிடைத்த என் விலா எலும்பு
- வீடு திரும்புதல் குறித்து
- நீலம்
- எரிதழல் கொண்டுவா தோழி
- ஆலயமணி - ஆராய்ச்சிமணி
- விதைப்பும் - அறுப்பும்
- கண்மூடி பார்த்தல்
- ஆரண்யம்..
- பரிமாற்றம்.
- உங்கள் கவனத்துக்கு...
- வாலும்..வாழ்வும்
- கற்றலில் நிற்றல்...
- வீட்டின் சாவி
- நிழலுரையாடல்
- தொங்கும் நேசம்
- உத்தரவு
- மறத்தலும்..மறத்தல் சார்ந்தும்...
- நீ காற்று...
- என்னிலிருந்த அவர்களும்..நானும்...
- உயிரின் கவிதை
- ஞாபகப் பெருக்கு..
- கட்டுப்படாத காற்று.
- அழகின் நிறத்தில் ஆபத்து...
- மன லாயம்
- யாவற்றுக்கும் அப்பால்..
- அழகின் அரக்கி
- பிரிந்தவர்களுக்கான நிலா
- நாம் பேச நினைப்பதெல்லாம்...
- பிரிவில் இணைந்தவர்கள்...
- இரவுக்கு தாலாட்டு
-
►
April
(33)