Sunday, April 12, 2009

கற்றலில் நிற்றல்...



.செய்வதற்கென்று 

நிறையவே இருந்தது.. 
சாலையிலொருவன் 
மயங்கி சரிகையில் 
ஓடிப்போய் தாங்கவும் 
மடியில் கிடத்தி 
தண்ணீரெனக் கதறி.. 
ஓடும் வாகனம் மறித்து 
மருத்துவமனை விரையவும்.., 

இப்படி 
எதையுமே 
செய்ய இயலாமல் போவதற்கு 
சட்டென கிளம்பிய 
நானிருந்த பேருந்தோ.., 
பக்கத்திருக்கையில் 
என்னை இறுக்கி வைத்திருந்த 
தொந்தி ஆசாமியோ., 
யாருமில்லை காரணம்..என 
உறைக்கும் 
போதி தருணத்தில் 
ஞானம் ஏற., 
தொண்டைக்குழியில் 
தயங்கியிறங்கும்.. 
டப்பாவிலடைத்த 
மதிய உணவு..! 

மீண்டுமொருமுறை 
இப்படி நேர்கையிலும்.. 
இப்படியேதான் 
நடந்துகொள்ளக்கூடும் 
என் 
பாடம் செய்யப்பட்ட 
பாழ்மனம். 


1 comment:

Blog Archive

Followers