Saturday, April 11, 2009

ஞாபகப் பெருக்கு..




நினைவு முட்டையை 
அடைகாத்து அடைகாத்து.. 
பொரிக்கிறேன் இக்கவிதையை.., 

தீராக்காதலின் 
ஈனத்தொனியில் 
பிரிவின் வலியில் 
கதறும் 
இக்குற்றுயிரை 
பரிவாய் அணைக்கும் 
என் இறகுகளெங்கும் 
கண்ணீரின் ஈரம்.., 

என்றாவதொரு நாள்.. 
இது கால்முளைத்து.. 
நாம் கைகோர்த்து நடந்த 
அதே ஒற்றையடிப் பாதையில் 
இரைத்தேடி பயணிக்ககூடும்.., 

ஏரிக்கரை 
ஐய்யனார் கோவிலருகாமை 
அரசமரத்தடியில் 
நாம் பதுங்கிய 
இருட்டு நிழல் வரப்போரம் 
அதற்கு கிடைக்கலாம்.. 
ஒரு பூரானோ.. 
சில கரையானோ..., 

இடுகாட்டு 
சுமைத்தாங்கி கல் தாண்டி.. 
ஊரெல்லை நுழைகையில் 
சிறுவர்கள் 
உள்ளங்கையில் வைத்துக் 
கொஞ்சக்கூடுமென்றாலும் 
சாதி வல்லூறுகள் 
பசி தீர்க்க 
படையெடுக்கும் 
ஆபத்தே அனேகம் என்பதால்.. 
பறந்து வந்து போராடி 
மீட்டெடுப்பேன்.. 
என் நினைவையாவது...! 

1 comment:

Blog Archive

Followers